×

அக்னி வீரர்களுக்கு திருமண வரன்கள் அமையாது : பகீர் கிளப்பிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்

மேகலாயா : ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், அக்னிப்பாதை திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 13ம் தேதி அறிவித்தது. இதன்படி 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகால ராணுவ பணியில் சேரலாம். இவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். அவர்களுக்கு பென்சன் கிடையாது.

இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான முந்தைய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால், பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர்.இதையடுத்து அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டம் தென் மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பரவியுள்ளது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் பேசிய மேகாலயாஆளுநரும், ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநருமான சத்யபால் மாலிக், அக்னிபாத் ஒரு தவறான திட்டம். இது ராணுவத்தின் கவுரவத்துக்கே எதிரானது.. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ராணுவத்தின் மதிப்பு குறைந்துவிடும். இந்த திட்டம் இளைஞர்களின் நம்பிக்கை மீதான மோசடி. 4 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியம் இன்றி வீடு திரும்பும் அக்னி வீரர்களுக்கு திருமண வரன்கள் அமையாது என்பதால் அக்னிபாதை திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது. ஆகவே ஒன்றிய அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.



Tags : Agni ,Meghalaya ,Governor ,Satyapal Malik , Agni Veterans, Marriage, Grooms, Meghalaya, Governor, Satyapal Malik
× RELATED அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி