×

மண்டல பறக்கும் படை குழு சார்பில் சென்னையில் ஒரு வாரத்தில் 233 ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி மண்டல பறக்கும் படை குழுவினரால் கடந்த ஒரு வாரத்தில் 233 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை  மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி இடங்களில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை  அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை  துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல  பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் மண்டல செயற்பொறியாளர்  தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு உதவி மேல்நிலை பொறியாளர், ஒரு மின்  துறை உதவி பொறியாளர், 10 சாலைப் பணியாளர்கள் மற்றும் 5 மலேரியா  பணியாளர்கள் என மொத்தம் 18 பேர் உள்ளனர். கட்டிட கழிவுகளை அகற்ற 1  பாப்காட் இயத்திரம், ஆக்கிரமிப்புகளை அகற்ற 1 பொக்லைன் இயந்திரம் மற்றும் இவற்றை கொண்டு  செல்ல லாரி வழங்கப்பட்டுள்ளது.

 இக்குழுவானது வாரத்தில் மூன்று நாட்கள்  அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில்  ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. மாநாகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள  விதிமுறைகளின்படி, கட்டிடக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள்  மற்றும் மழைநீர் அடில்களில் கழிந்திர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள்  ஆகியோர் மீது அபராதமும், இக்குழு மூலம் விதிக்கப்பட்டு வருகிறது. இக்குழுவினரால் இந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியில்  மண்டலங்களில் 233 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 89 மெட்ரிக் டன் அளவிலான  கட்டிடக் கழிவுகள் அற்றப்பட்டு உள்ளன.

மேலும் மழைநீர்  வடிகால்களிலிருந்து 23 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள்  தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொது இடங்களில் கட்டிட  கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மழைநீர் வடிகால்களில்களில் உள்ள சட்டவிரோத  கழிவுநீர் இணைப்புகளை உடனடியாக அற்ற வேண்டும். தவறும்பட்சத்தில்  மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மண்டல பறக்கும் படை குழுவினரால்  அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் மாநகராட்சியின் அந்த  நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும், அபராதம்  செலுத்துவதை தவிர்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

13 டன் பிளாஸ்டிக் பைகள்  பறிமுதல்: சென்னையில் சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 124வது வார்டு, கச்சேரி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம்    மேயர் பிரியா, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில்  மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மை  பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகள் என 4,730 பேர் பங்கேற்றனர். இவர்கள் 49,441 இல்லங்களுக்கு சென்று குப்பையை மக்கும் மக்காத குப்பையாக பிரித்து வழங்குவது குறித்து 69,230 பேருக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 அதன் தொடர்ச்சியாக அதிக குப்பை உற்பத்தியாகும் இடங்களாக 981 இடங்கள் கண்டறியப்பட்டு  அவற்றில் 419 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  அதிக குப்பை சேரும் இடமாக 256 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 249 இடங்களில் மாநகராட்சி சார்பில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ள  திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில்  நேற்று முன்தினம் நடந்த  தீவிர தூய்மை பணியில் 3,37,257 கிலோ திடக்கழிவுகளும் 3,64,427  கிலோ கட்டிடக் கழிவுகளும் அகற்றப்பட்டன. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்  13,060  கிலோ  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,Zonal Flying Squadron , Zonal Flying Corps, Occupancy Removal, Corporation
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...