சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது. தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சென்னைப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது இதை தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்று தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை 101, 108 ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பதவியை மீண்டும் கொண்டு அதிகார பகிர்வை பரவலாக்க வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, தகுதியானவர்களை நிரந்தர பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தாஸ் தெரிவித்தார்.