×

ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக ஆட்சி திகழ தனியார் கல்வி நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும்: கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாகத் இந்த ஆட்சி திகழ  வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த  இலக்கு நோக்கிய பயணத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும்  துணை நிற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடைபெற்ற ஜமால் முகமது கல்லூரி முப்பெரும் விழாவில் காணொலி காட்சி வாலியாக கலந்து கொண்டு பேசியதாவது:

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் காணொளி காட்சியின் மூலமாகப் பங்கெடுத்து உங்கள் முன்னால் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாக இருந்தாலும், அனைவரும் பயிலும் நிறுவனமாக இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி, படிப்பு, பட்டம் ஆகியவற்றைத் தாண்டிய தனித்திறமைகளும், பல்துறை அறிவாற்றலும் இருக்கக்கூடிய இளைஞர்களால் தான் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும், அதிக வளர்ச்சியை அடைய முடியும்.

அந்த நோக்கத்துக்காகத் தான் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை நம்முடைய தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. இது என்னுடைய கனவுத் திட்டம். அதனால் தான் என்னுடைய பிறந்த நாளான மார்ச் 1 அன்று அந்தத் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் கல்வியில், அறிவாற்றலில், பன்முகத் திறமையில் முதல்வனாகத் திகழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டத் திட்டம் தான் “நான் முதல்வன்” என்கிற அந்தத் திட்டம்.  

நேற்றைக்குக்கூட இந்தத் திட்டத்தினுடைய ஒரு பகுதியாக “கல்லூரிக் கனவு” என்கிற உயர் கல்வி வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை சென்னையில் நான் தொடங்கி வைத்தேன். தொடர்ந்து மாநிலம் முழுவதும் அடுத்த சில நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. பள்ளிக் கல்வியில் பெருந்தலைவர் காமராசர் காலமும், கல்லூரிக் கல்வியில் கலைஞர் காலமும், சிறப்பாக விளங்கியதைப் போல, இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வியின் ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த இலக்கு நோக்கிய பயணத்தில் ஜமால் முகமது போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும்.

கல்லூரி கல்வியைத் தேடி வரும் இளைஞர்களை, பட்டதாரிகளாக மட்டுமல்ல, அறிவாளிகளாக, அறிவுக்கூர்மை கொண்டவர்களாக, பன்முகத் திறமை கொண்டவர்களாக, வளர்த்தெடுக்க நீங்கள் திட்டமிட வேண்டும். ஜமால் முகமது கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கமானது உலகின் 19 நாடுகளில் இயங்கி வருவதைப் பார்க்கும் போது, எத்தகைய திறமைசாலிகளை உருவாக்கி இருக்கிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

இப்படி படித்த மாணவர்கள் தங்கள் கல்லூரியையும் மறந்துவிடாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களது கல்விக்கு உதவி செய்து வருவதை அறியும் போது, கல்வியுடன் சிறந்த மனிதாபிமானத்தையும் ஊட்டும் நிறுவனமாக நீங்கள் செயல்பட்டு வருவதை உணர முடிகிறது. இத்தகைய சிறப்புமிகு கல்லூரியின் முப்பெரும் விழாவில் காணொளி மூலமாகக் கலந்து கொண்டு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,MK Stalin , Research Education, Private Educational Institutions, College Festival, Principal MK Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...