×

விழுப்புரத்தில் நள்ளிரவில் ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை கடத்திய வாலிபர்கள்: போலீசை கண்டதும் தப்பியோட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை கடத்திய வாலிபர்கள், போலீசாரை கண்டதும் நள்ளிரவில் தப்பியோடிவிட்டனர். சினிமாபட பாணியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரைச் சேர்ந்தவர் சூர்யகுமார்(19). இவர் தனது தாய் கிருஷ்ணவேனியுடன் வசித்து வருகிறார். இதனிடையே, கிருஷ்ணவேணி அப்பகுதியில் வட்டிக்கு பணம் விடுவது வழக்கமாம். இதனிடையே, நேற்று முன்தினம் சூர்யகுமார், நண்பர்களான சரவணப்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, நந்தா, மாரி, பெரியபாலா, முரளி ஆகியோர் ஜானகிபுரம் பகுதிக்கு வந்துள்ளனர்.

ஏற்கனவே, சூர்யகுமார் குடும்பத்துடன் திருவெண்ணைய்நல்லூர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்தபோது இவர்கள் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று டீ குடிப்பதற்காக சூர்யகுமாரை 5 பேரும் அழைத்துள்ளனர். பின்னர், ஜானகிபுரம் பகுதிக்கு வந்ததும் சூர்யகுமாரை காரி ஏற்றி கரடிப்பாக்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், சூர்யகுமாரிடம் 5 பேரும் சேர்ந்து உங்கள் அம்மாவிடம் நிறைய பணம் இருக்கிறது, ரூ.10 லட்சம் வாங்கித்தருமாறு கேட்டு மிரட்டியுள்ளனர். இதற்கு மறுக்கவே சரமாரியாக அவரை தாக்கியுள்ளனர்.

மேலும், கிருஷ்ணவேணிக்கு போன் போட்டு பணம் எடுத்து வருமாறும் மிரட்டியுள்ளனர். அடி தாங்கமுடியாத சூர்யகுமாரும் வேறுவழியில்லாமல் தனது தாயை தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியுள்ளார். அவர் மாவட்ட காவல்துறை உதவியை நாடியுள்ளார். பின்னர் தாலுகா போலீசார் அறிவுரையின்பேரில் சினிமா படத்தில் வருவதைப்போல் ரூ.10 லட்சத்தை ஒரு பேக்கில் போட்டுக்கொண்டு தயாராகியுள்ளார்.

அப்போது, அந்த கும்பல் விழுப்புரம் புறவழிச்சாலையில் எல்லீஸ்சத்திரம் சாலைக்கு தனியாக நள்ளிரவு வரவேண்டுமென கூறியுள்ளார். அதன்படி, பணப்பையை எடுத்துக்கொண்டு அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளனர். யாருக்கும் தெரியாமல், போலீசார் கிருஷ்ணவேணியை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றபோது, போலீசார் ஜீப்பில் அங்கு விரைந்தனர். போலீசை கண்டதும், 5 பேர் கொண்ட கும்பல் சூர்யகுமாரை காரிலிருந்து இறக்கிவிட்டு தப்பியோடிவிட்டது. காயமடைந்த அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து 3 தனிப்படை அமைத்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.


Tags : Villupuram , Abducted teenagers flee after being spotted by police
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...