×

வேடசந்தூர் அருகே பரபரப்பு இளம்பெண்ணை வெட்டிக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி சடலம் வீச்சு: தப்பி ஓடிய 3வது கணவன் கைது

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூலாங்குளம் பகுதியில் சாக்குமூட்டையில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தவர் கீழ்தப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி (28) என்பது தெரிய வந்தது. இவரது கணவர் அமுல்ராஜ் (30). இவர், ஆந்திராவிற்கு கஞ்சா கடத்தி சென்றபோது, அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.

 தனியாக வசித்து வந்த பாண்டீஸ்வரிக்கு, வேடசந்தூர் அருகே உள்ள சேடபட்டியை சேர்ந்த கவுசிக் பாண்டி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இரண்டு மாதமாக கௌசிக் பாண்டியும், பாண்டீஸ்வரியும் திருமணம் செய்து ஒன்றாக வசித்து வந்தனர். கவுசிக் பாண்டி, பாண்டீஸ்வரியின் 3வது கணவர் ஆவார். இந்த நிலையில், நேற்று காலை பாண்டீஸ்வரியுடன் ஏற்பட்ட தகராறில், கவுசிக் பாண்டி அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி, சாக்குமூட்டையில் கட்டி, பூலாங்குளம் பகுதியில் சாலையோரத்தில் வீசிச் சென்றுள்ளார் என தெரிய வந்தது. இதையடுத்து பாண்டீஸ்வரியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கவுசிக் பாண்டியை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.

கொன்றது ஏன்?: பாண்டீஸ்வரியும், கவுசிக் பாண்டியும் செல்போன் மூலம் பல்வேறு நபர்களை தொடர்பு கொண்டு அவர்களை   தனிமையான இடத்திற்கு வரவழைப்பது வழக்கம். அப்படி வருபவர்களிடம்  பாண்டீஸ்வரி ஜாலியாக பேசிக் கொண்டிருப்பாராம். அப்போது மறைந்திருந்து வரும் கவுசிக் பாண்டி, ‘‘எப்படி எனது மனைவியுடன் பேசலாம்’’ என மிரட்டி அவர்கள்  வைத்திருக்கும் பணம், நகைகளை பறித்துக் கொள்வது வழக்கம்.

இதை பங்கு  போடுவதில் பாண்டீஸ்வரிக்கும், கவுசிக் பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டதும்,  இதில் ஆத்திரம் அடைந்த கவுசிக் பாண்டி நேற்று காலை கோவில்பட்டி பிரிவு பஸ்  ஸ்டாப் அருகே அவரை வெட்டிக் கொலை செய்து, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி  பூலாங்குளம் பகுதியில் வீசியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை வழக்கில் கைதானவர்
பாண்டீஸ்வரி முதல் கணவரை விட்டுவிட்டு, 2வதாக தினேஷ்குமாரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி சுஷ்மிதா என்ற மனைவி இருந்தார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, தினேஷ்குமாரும், பாண்டீஸ்வரியும் காரில் ஏற்றி சென்றுள்ளனர். கூம்பூர் பகுதியில் சுஷ்மிதாவின் கழுத்தை பாண்டீஸ்வரி நெரித்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக கூம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து தினேஷ்குமார் மற்றும்  பாண்டீஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த பாண்டீஸ்வரி, தினேஷ்குமாரை கைவிட்டு 3வதாக சேடபட்டியைச்  சேர்ந்த கவுசிக் பாண்டியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Vedasandur , Vedasandur, murder of a young girl, 3rd husband arrested
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது