அவனியாபுரம்: எனக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டது, தொண்டர்களிடம் இருந்து என்னை யாரும் பிரிக்க முடியாது என மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு நேற்று பகல் வந்தார்.
அங்கு அவர் அளித்த பேட்டி:
உயிரினும் மேலான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். தொண்டர்களோடு என்றும் இருப்பேன். தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பவன் நான். 30 வருடங்களாக கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறேன். அம்மாவின் வழியில் செயல்பட்டு வருகிறேன். தொண்டர்களிடமிருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது. 50 ஆண்டுகால அதிமுக இயக்கம் மனிதாபிமான இயக்கம். முப்பது ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த இயக்கம்.
தற்போது யாரால் இந்த அசாதாரண சூழல் ஏற்பட்டது, எனக்கு எதிராக சதி வலை பின்னப்பட்டது, எதனால் சதி வலை பின்னப்பட்டது என்று கட்சித்தொண்டர்களும், மக்களும் அறிவார்கள். அவர்களுக்கு உரிய நேரத்தில் உறுதியாக தொண்டர்கள் உரிய பாடம் நடத்துவார்கள். ‘‘நமது அம்மா’’ பத்திரிகையில் நிறுவனராக என்னை சேர்த்த விவரமும் எனக்குத் தெரியாது அதேபோல், அதிலிருந்து நீக்கியதும் எனக்குத் தெரியாது. ஜெயலலிதா இதயத்தில் இருக்கும் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டர் இயக்கத்திற்கு கிடைத்துள்ளார் என்று ஜெயலலிதா கூறியது என் பாக்கியம். இதைவிட வேறு என்ன வேண்டும் என்றார்.
விமான நிலையத்திற்கு வெளியேயும் பெருங்குடி பகுதியிலும் ஏராளமான அதிமுகவினர் ‘‘நிரந்தர ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்’’ என்று கோஷம் இட்டு வரவேற்பளித்தனர். விமான நிலையத்தில் அவரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி, மாநிலங்களவை எம்பி தர்மர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
காவி துண்டு அணிவித்து பாஜ வரவேற்பு
ஆண்டிபட்டி பகுதிக்கு வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது தொண்டர்களின் வாகனங்களால் நகரில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு திடீரென வந்த ஆம்புலன்சும் நகரைக் கடக்க முடியாமல் ஊர்ந்து சென்றது. ஆண்டிபட்டியில் இருந்து தேனி நோக்கிச்சென்ற ஓபிஎஸ் வாகனம், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. மற்றொரு நிகழ்ச்சிக்காக கூடியிருந்த பாஜ நிர்வாகிகளும் ஓபிஎஸ்சுக்கு வரவேற்பளித்தனர். பாஜ மாவட்டத்தலைவர் பாண்டியன் தலைமையில் காவி துண்டை ஓபிஎஸ் கழுத்தில் அணிவித்து வரவேற்றனர்.
ஓபிஎஸ் பிரசார வாகனத்தில் இபிஎஸ் படம் கிழிக்க முயற்சி
மதுரை விமான நிலையத்தில் இருந்து ஓ.பி.எஸ் தனது பிரசார வேன் மூலம் தேனி புறப்பட்டார். விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். அப்போது அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் கீழே விழுந்தனர். பின்னர் பிரசார வாகனத்தில் ஓபிஎஸ் ஏறி அமர்ந்தார். வேன் புறப்பட்டது. பிரசார வேனில், ஓபிஎஸ், இபிஎஸ் படம் இருந்தது. இதனை பார்த்த ஒரு தொண்டர் வேகமாக ஓடிவந்து பிரசார வேனில் ஏறி, இபிஎஸ் ஒழிக என திட்டியவாறு, அந்த படத்தை கிழித்தார். ஆனால், சரியாக கிழிக்க முடியவில்லை. உடனே, செருப்பை எடுத்து இபிஎஸ் படத்தின் மீது அடித்தவாறு பிரசார வாகனத்தில் தொங்கியவாறு சென்றார்.