மதுரை: பதிவுச்சான்று வழங்க லஞ்சம் கேட்ட ஜிஎஸ்டி ஆய்வாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதிதாக தொடங்கிய கம்பிவேலி உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு கடந்த 1ம் தேதி ஜிஎஸ்டி பதிவுச்சான்றுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தார். கடந்த 23ம் தேதி கரூர் ஜிஎஸ்டி பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு தொலைபேசியில் அழைத்துள்ளனர்.
இதையடுத்து அய்யப்பனின் நிறுவனம் தொடங்குவதில் சில பிரச்னைகள் இருப்பதால் நிறுவனத்திற்கான பதிவுச்சான்று வழங்க ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் சுபேசிங் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் மீண்டும் அடுத்த நாளில் மேலும் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதுபற்றி அய்யப்பன், மதுரை சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதிகாரிகள் வழங்கிய பணத்தை ஜிஎஸ்டி ஆய்வாளர் சுபேசிங்கை சந்தித்து பணம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த அதிகாரிகள் சுபேசிங்கை கைது செய்தனர். பின்னர் மதுரை கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.