சென்னை: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பேரணி நடைபெற்றது. சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கடந்த 2 நாட்களாக மாநகரம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை அருகே சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை மாநகர தெற்று கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளின் போதை ஒழிப்பு மவுனம் நாடகம் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் இணை கமிஷனர்கள் நரேந்திரன் நாயர், ரம்யா பாரதி, அடையார் துணை கமிஷனர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.