சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 13வது முறையாக மேலும் ஒரு மாதம், அதாவது, ஆகஸ்ட் 3ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ெதாடர்ந்து புகார்கள் எழுந்ததையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அப்போலோ மருத்துவர்கள் உள்பட 159 பேரிடம் இதுவரைக்கும் விசாரணை நடத்தி உள்ளது. மேலும் விசாரணையை கடந்த ஏப்ரல் மாதம் இறுதியிலேயே முடிவடைந்தாக விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த விசாரணை அறிக்கையை கடந்த ஜூன் 24ம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறியிருந்தது. அதன்படி அறிக்கையை அதற்குள் தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க முடியாது என்பதால் ஜூலை வரைக்கும் கால நீட்டிப்பு வழங்க வேண்டும். அதாவது மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருக்கிறது. அதன்படி 13வது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் கால அவகாசம் கோரியிருந்தது. அதன்படி கடந்த 24ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாதம் அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.