×

அதிக வட்டி தருவதாக 1,678 கோடி வசூல் ஆருத்ரா கோல்டு நிர்வாகிகளுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்  ராஜசேகர் உள்ளிட்ட 5 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி   உத்தரவிட்டுள்ளது.  சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை தொடங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30% வரை வட்டி தருவதாகக் கூறி 1,678 கோடி வரை மோசடியாக வசூலித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

 இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் மற்றும் நிறுவனத்தை சேர்ந்த ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிர்வாக இயக்குனர் ராஜசேகர் உட்பட 5 பேரையும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை  கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேற கூடாது.

முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்க வேண்டும். போலீஸ் விசாரணை முடியும்வரை  மேற்கொண்டு யாரிடமும் டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக உள்துறை செயலாளருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்படுகிறார். பணத்தை திருப்பி வழங்கியது தொடர்பாக ஆகஸ்ட் 8ம் தேதி வரை வாரந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.




Tags : Arutra Gold ,Chennai High Court , 1,678 crore, raising interest rates Conditional pre-bail for Arudra Gold executives: Chennai High Court order
× RELATED ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: 400 ஏஜெண்டுகளின் சொத்துக்கள் முடக்கம்!