ஊட்டி : ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர்,கூடலூர்,பந்தலூர்,கோத்கதிரி மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மொத்தம் 345 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த பள்ளி வாகனங்கள் ஆண்டு தோறும் பள்ளிகள் திறக்கப்படும் முன் மாணவர்களை ஏற்றிச் செல்ல தகுதியானவைகளாக உள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அனைத்து பள்ளிகளிலும் இயக்கப்படும் பள்ளி வாகனங்களின் தரத்தை ஆய்வு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊட்டி, குன்னூர், குந்தா மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள 255 பள்ளி வாகனங்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அம்ரித், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயா ஆகிேயார் இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, இக்கூட்டாய்வில் பள்ளி வாகனங்கள் தமிழ்நாடு மோட்டார் வாகன (பள்ளிகள்) சிறப்பு விதி 2012ன்படி இயங்குவதற்கு தகுதியான நிலையில் தகுதிச்சான்று, முதலுதவிப் பெட்டி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு உபகரணங்கள், அவசரவழி முறையாக உள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. சில வாகனங்களுக்கு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை சரி செய்த பின் இயக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நீலகிரி மாவட்ட தீயணணப்பு துறையினரால் தீயணைப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு சாலைபாதுகாப்பு தொடர்பான, விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. இதே போன்று கூடலூரில் 90 பள்ளி வாகனங்களும் மீதமுள்ள பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் ஓரிரு நாளில் ஆய்வு செய்யப்படவுள்ளது. கலெக்டர் அம்ரித் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலூகாவில் மொத்தம் 345 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பள்ளி வாகனங்கள் மாணவர்களை ஏற்றிச்செல்ல தகுதியானவையாக உள்ளதா, முதலுதவி ெபட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா, அவசர கால வழிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து (இன்று) நேற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று (நேற்று) ஊட்டியில் நடந்த ஆய்வின் போது, ஊட்டி, குந்தா, கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் 90 வாகனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும், என்றார்.