* துர்நாற்றத்தால் மக்கள் அவதி
* நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் விளங்குகிறது. மேலும், நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள மீனவர்கள் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் மீனவர் மக்களின் வாழ்வாதாரத்திற்காக 20 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்படுகிறது.
குறிப்பிட்ட காலம் வரை அந்த மீன் குஞ்சுகள் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் வளரும். அதன் பிறகு மீனவர்கள் அதனை பிடித்து விற்பனை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர். இந்நிலையில், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் டன் கணக்கில் சிறிய வகை முதல் பெரிய வகை மீன்கள் வரை இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நீர்த்தேக்கத்தின் கரையோரம் செத்துப்போன மீன்கள் ஒதுங்கியிருக்கிறது.
இதனால் பூண்டி நீர்த்தேக்கம் வழியாகச் செல்லும் கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். மேலும் சென்னை மக்களுக்கு அனுப்பப்படும் குடிநீரில் மீன்கள் செத்து மிதப்பதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் உள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நீரின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* மீனவர் மக்களின் வாழ்வாதாரத்திற்காக 20 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்படுகிறது. குறிப்பிட்ட காலம் வரை அந்த மீன் குஞ்சுகள் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் வளரும்.
* பூண்டி நீர்த்தேக்கம் வழியாகச் செல்லும் கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர்.