கொல்கத்தா: மகாராஷ்டிராவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பாஜவையும் யாராவது உடைக்கலாம் என்று அக்கட்சிக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. அங்கு ஆளும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொது பணித்துறை அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே, 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்களுடன் பாஜ ஆளும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சமடைந்துள்ளார்.
அவர்கள் அரசுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் உத்தவ்தாக்கரே அரசுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், பாஜ அரசால் ஜனநாயகம் முற்றிலும் புல்ேடாசர் செய்யப்பட்டு விட்டது. ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை விரட்ட ஒன்றிய அரசு பணத்தையும், சிபிஐ, அமலாக்கத்துறையை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. எனது கட்சியை சேர்ந்த 200 பேருக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது.
ஆனால் பாஜவுடன் இருப்பவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும். இன்று நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அதனால் பணபலம், மாபியா பலத்தை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருந்து சென்றாக வேண்டும். உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம். இது தவறு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மகாராஷ்டிராவிற்கு பிறகு மற்ற மாநில அரசுகளையும் கவிழ்ப்பார்கள். மக்களுக்கு நீதி வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.