காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம்.
சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூ. 350ம், 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு கட்டணமாக ரூ. 325 மட்டும் செலுத்தப்பட வேண்டும். இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் சேர்ந்து பயில விண்ணப்பத்தை நா.இரமணி, தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம் 631502 எனும் முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-27268190, 9442572948, என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.