புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் இடைத்தரகர் சுகேஷையும், அவருடைய மனைவியையும் டெல்லி திகார் சிறையில் இருந்து மண்டோலி சிறைக்கு மாற்ற ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளது. இரட்டை இலை சின்னம் பெற்று தருவதற்காக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரும், அவரது மனைவி லீனா பவுலோசும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில் சகல வசதிகளுடன் இருக்க 2 வாரத்துக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்கும், தனது மனைவி உயிருக்கு சிறை அதிகாரிகளால் ஆபத்து நேரிடும் அச்சம் உள்ளதால், திகார் சிறையில் இருந்து டெல்லிக்கு வெளியே உள்ள ஏதாவது ஒரு சிறைக்கு மாற்றும்படி சுகேஷ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி. ராஜூ, சுகேஷ், அவரது மனைவியை துணை ராணுவம் பாதுகாப்பு அளிக்கும் மண்டோலி சிறைக்கு மாற்றலாம் என ஒன்றிய அரசு சார்பில் தெரிவித்தார். இதையடுத்து, மண்டோலி சிறைக்கு மாற்றுவதில் சிக்கல் எதுவும் உள்ளதா என்பது குறித்து சுகேஷ் தரப்பில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.