×

குறைந்த விலையில் பயிர் விளைச்சலை அதிகரிக்கும் திறனுள்ள உயிர் உரங்களை பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: குறைந்த விலையில் பயிர் விளைச்சலை அதிகரிக்கும் திறனுள்ள உயிர் உரங்களை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துவது தொடர்பான செய்தி; தற்போது இரசாயன உரங்களின் விலை உயர்வினால், சாகுபடி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வளிமண்டலம் மற்றும் மண்ணிலுள்ள சத்துக்களைக் கிரகித்தும், மண்ணில் இருந்தாலும், பயிர்களுக்கு முழுவதும் கிடைக்காத நிலையில் உள்ள சத்துக்களை பயிர்களுக்குக் கிடைக்கும் நிலையில் மாற்றி கொடுப்பதிலும் உயிர் உரங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். உயிர் உரங்கள் என்பது கண்ணுக்குத் தெரியாத, ஆனால் உயிருள்ள பாக்டீரியா நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய உரமாகும்.

இத்தகைய உயிர் உரங்களை விதையுடன் கலந்தோ அல்லது மண்ணில் இடும்பொழுதோ வேரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பயிர்களுக்குள்ளும் பலமடங்காகப் பெருகி, பயிருக்குத் தேவையான சத்துக்களை தந்து, பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. இத்தகைய  உயிர் உரங்கள் பயிர் வாரியாக தயாரிக்கப்படுகின்றன. நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் என அனைத்து பயிர்களின் தன்மைக்கேற்ப அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா என பல்வேறு வகையான உயிர் உரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் காற்றிலுள்ள தழைச்சத்தினை கிரகித்து, பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் தழைச்சத்தினை மண்ணில் மாற்றி வழங்குகிறது.

பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் மண்ணில் எளிதில் கிடைக்காத நிலையிலுள்ள மணிச்சத்து, சாம்பல் சத்துக்களைக் கரைத்து பயிர்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் மாற்றி அளிக்கிறது. மேலும் வறட்சி மற்றும் கார, உவர் தன்மையைத் தாங்கி வளரும் திறனையும் இத்தகைய உயிர் உரங்கள் நிலத்திற்குத் தருகிறது. பயிர் வளர்ச்சி ஊக்கிகள், நோய்க்கான காரணிகளை எதிர்க்கும் தன்மை கொண்ட வேதி மூலக்கூறுகளையும் உற்பத்தி செய்வதால், பயிர் வளர்ச்சி மேம்படுகிறது. நிலத்திற்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் மிகவும் உகந்த இடுபொருட்களாக இருப்பதால், உயிர் உரங்கள் இயற்கை வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பயிர் சாகுபடியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இத்தகைய உயிர் உரங்களை விவசாயிகளுக்கு மிகவும் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், நமது மாநிலத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் 22 உயிர் உர உற்பத்தி மையங்கள் இயங்கி வருகின்றன. இம்மையங்கள் மூலம் அசோஸ்பைரில்லம் - நெல், அசோஸ்பைரில்லம் - இதர பயிர்கள், ரைசோபியம் - பயறு வகைகள், ரைசோபியம் - நிலக்கடலை, பாஸ்போபாக்டீரியா, திரவ பொட்டாஷ், அசோபாஸ் - நெல், அசோபாஸ் - இதர பயிர்கள் போன்ற எட்டு வகையான உயிர் உரங்கள் திரவ வடிவில் ஆண்டிற்கு 12 இலட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு, அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், அடர்த்தியாக்கப்பட்ட உயிர் உரங்களை புற ஊதா கதிர்கள், சூரிய வெப்பம், நீரிழப்பு போன்றவற்றால்  பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் 12 மாதங்கள் வரை பயன்படுத்தும் வகையில், சிறப்பு ஊடகத்தில் கலந்து கலன்களில் அடைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இத்தகைய உயிர் உரங்களின் விலை இரசாயன உரங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான்.  100 மி.லி. உயிர் உரம் ரூ. 36/-க்கும், 250 மி.லி. உயிர் உரம் ரூ. 85/-க்கும், 500 மி.லி. உயிர் உரம் ரூ.150/-க்கும், ஒரு லிட்டர் உயிர் உரம் ரூ. 280/-க்கும் கிடைக்கிறது. விதை நேர்த்திக்கு ஏக்கருக்கு 50 மி. லிட்டரும், நாற்றை நனைத்து பயன்படுத்துவதற்கு ஏக்கருக்கு 150 மி.லிட்டரும், நேரடியாக வயலில் இடுவதாக இருந்தால் ஏக்கருக்கு 150 மி.லிட்டரும், வேரின் மூலம் உரமிடுவதாக இருந்தால்  ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மி.லிட்டரும்  உயிர் உரங்கள் போதுமானதாகும்.

விதை நேர்த்திக்கு பயன்படுத்தும் முறை

50 மிலி திரவ உயிர் உரத்தை ஒரு லிட்டர் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் 1 ஏக்கருக்குத் தேவைப்படும் விதையை கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்கலாம். உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்யும்போது எவ்வித இரசாயன மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாற்றை நனைத்துப் பயன்படுத்தும் முறை

ஏக்கர் ஒன்றுக்கு 150 மிலி திரவ உயிர் உரத்தை சிறிய பாத்தி அமைத்து தேவையான அளவு தண்ணீரில் கலந்து நாற்றின் வேர் நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் நடவு செய்யலாம்.

நேரடியாக வயலில் இடுவதற்கு பயன்படுத்தும் முறை

ஏக்கர் ஒன்றுக்கு 200 மிலி திரவ உயிர் உரத்தை மக்கிய தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன் வயலில் இடலாம்.

நீர் வழி மூலம் உரமிடும் போது பயன்படுத்தும் முறை:

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி. திரவ உயிர் உரம் என்ற அளவில் கலந்து, விதைத்த நாளிலிருந்து முறையே 15, 30 மற்றும் 45 ஆம் நாட்களில் உபயோகிக்கலாம். விவசாயிகளுக்குத் தேவையான உயிர் உரங்கள் போதுமான அளவில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் உள்ளிட்ட விதைகள் வாங்கும் போது, தவறாது உயிர் உரங்களையும் சேர்த்து வாங்கி, குறைந்த செலவில் மண்ணின் வளம் அதிகரிக்கும் வகையில், தங்கள் நிலங்களில் இட்டு, பயனடையுமாறு அனைத்து விவசாயிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Government of Tamil Nadu , Government of Tamil Nadu Advice on the use of bio-fertilizers capable of increasing crop yield at low cost
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...