தேனி: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராஜராஜேஸ்வரி. போடியை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில், குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 30ம் தேதி ராஜராஜேஸ்வரியின் அலுவலக அறைக்குள் நுழைந்த, உமாசங்கர் முன்விரோதம் காரணமாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவரது பைக்குள் வைத்திருந்த அரிவாளால் ராஜராஜேஸ்வரியை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராஜராஜேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து உமா சங்கரை கைது செய்தனர். பணிநேரத்தில் அதிகாரியை கொலை செய்யும் நோக்கத்தோடு அரிவாளால் வெட்டிய அரசு இளநிலை உதவியாளர் உமாசங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே, கலெக்டர் முரளீதரனுக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்று கலெக்டர் முரளிதரன், உமா சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் போலீசார் நேற்று இரவு உமாசங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.