கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர், அவர்கள் மரவள்ளி குச்சி நடவு செய்தது முதல் தொடர்ந்து களை வெட்டி, மருந்து தெளித்து முறையாக தண்ணீர் பாய்ச்சி வந்தார்கள். தற்சமயம் அதன் பலனாக மகசூல் அறுவடை தொடங்கியுள்ளது. தற்சமயம் பெய்த மழையின் காரணமாக கிழங்குகளை பறிப்பது தொழிலாளர்களுக்கு சுலபமாக இருக்கிறது.
மேலும் விவசாயிகளுக்கு கிழங்கு சேதாரம் இல்லாமல் உள்ளது. கிழங்கு கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள் சேலத்தில் இருந்து இப்பகுதியில் முகாமிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளிடம் மரவள்ளிக் கிழங்குகளை டன் கணக்கில் விலைபேசி கொள்முதல் செய்துகொள்கிறார்கள். தற்சமயம் கொள்முதல் செய்யும் மரவள்ளிகிழங்குகள் ஜவ்வரிசி ஆலைகளுக்கும், சிப்ஸ் கடைகளுக்கும் ஏற்ற ரகமாக உள்ளது என கூறுகின்றனர்.
விவசாயிகள் கூறும்போது இந்த பட்டத்தில் பயிர் செய்த மரவள்ளிகிழங்கு நல்ல மகசூல் மேலும் விலையும் நல்லமுறையில் இருப்பதாக தெரிவித்தனர். மரவள்ளிகிழங்கை பொறுத்தவரை குறைந்த அளவு தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்றும் வேலையாட்கள் குறைவாக தான் தேவைபடுவார்கள் என கூறுகின்றனர்.
இந்த பகுதி விவசாயிகள் அனைவரும் ஒரே மாதிரியாக விவசாயம் செய்வதால் விவசாய பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒவ்வொரு விவசாயிகளும் வேறுவேறு விவசாயங்களை மாற்றி செய்தால் விற்பனை சந்தையில் சுலபமாக விவசாயிகள் வென்றுவிடலாம் என கூறுகின்றனர்.