லால்குடி : லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் எள் ரூ.11,630க்கு ஏலம் போனது.லால்குடி வட்டாரத்தில் மாசி பட்டம் எள் அறுவடை தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் லால்குடி ஒழுங்குமுறை விறபனை கூடத்தில் எள் மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த எள், உளுந்து பயிர்கள் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த விற்பனை வாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு மறைமுக ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்றது. இதில் எள் மற்றும் உளுந்து மறைமுக ஏலத்தில் லால்குடி வட்டாரமான மேட்டுப்பட்டி, செம்பரை, மேலவாளை, சிறுதையூர், நன்னிமங்கலம், சாத்தமங்கலம், அன்பில், கீழபெருங்காவூர், திருமங்கலம் ஆகிய கிராமத்தை சேர்ந்த 13 விவசாயிகள் தாங்கள் விளைவித்த எள் விளைபொருட்களை லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டுவந்தனர். எள் மறைமுக ஏலத்தில் 6 எள் வியாபாரிகள் கலந்துகொண்டு அதிக பட்சமாக குவிண்டாலுக்கு ரூ.11,630க்கு ஏலம் எடுத்தனர். சராசரியாக ரூ.11,100 வீதம் ஏலம் போனது.
திருச்சி விற்பனைக்குழு செயலாளர் காந்திகாமராஜ் முன்னிலையில் லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்குழு மேற்பார்வையாளர் விவேக், சங்கீதா மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சிவசக்தி ஆகியோர் மேற்பார்வையில் மறைமுக ஏலம் நடைபெற்றது.