நீடாமங்கலம் : நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் சுமார் 6ஆயிரம் ஏக்கரில் கோடைசாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்து நெற்பயிர்களை ஈரப்பதம் குறைய வெயிலில் காயவைத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் சித்தமல்லி, பரப்பனாமேடு, கிளாச்சேரி, மேலபூவனூர், முன்னாவல்கோட்டை, ஆதனூர், கோவில்வெண்ணி, கடம்பூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடிநீரை பயன்படுத்தி மின் மோட்டார் மூலம் சுமார் 6ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கோடை சாகுபடி செய்துள்ளனர்.
கோடை சாகுபடி செய்த பயிர்களை தற்போது இயந்திரம் மூலம் அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்த நெற்பயிர்களை கொண்டியாறு பாலம் அருகில், ரிஷியூர், பெரம்பூர், கோவில்வெண்ணி உள்ளிட்ட பல இடங்களில் நெல்மணிகள் ஈரப்பதம் குறைய முட்டு முட்டாய் கொட்டி வெயிலில் காயவைத்து அந்த நெல்மணிகளை சிலர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும், சிலர் மொத்த நெல் வியாபாரிகளிடமும் விற்பனை செய்கின்றனர்.