தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தில் மார்பில் கற்கள் பெயா்ந்து கிடப்பதால் விவசாயிகள் அப்பாதையில் நடந்து செல்ல அச்சமடைகின்றனா்.திருக்கடையூரில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 11.05.2017 ம் ஆண்டு அப்போதைய முதல்வா் எடப்பாடி-பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தில் வட்டார வேளாண் உதவி இயக்குநா், வேளாண் அலுவலா்,உதவி வேளாண் அலுவலா்கள், மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்,தோட்டக்கலை அலுவலா்கள், பணியாற்றி வருகிறார்கள். செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 56 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த அலுவலகம் பயன்பட்டு வருகிறது. அலுவலகத்தின் கீழ்தளம் மார்பிள் கற்களால் பதியபட்டுள்ளது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் செல்லும் பாதையில் பதியபட்டுள்ள மார்பிள் கற்கள் உடைந்து பள்ளமாகவும் சேதமடைந்தும் கிடக்கிறது. அந்த பாதை வழியாக தோட்டக்கலை உதவி அலுவலகம் செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனா். தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள வேளாண் அலுவலகம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொிவித்துள்ளனர்.