டெல்லி: ஒன்றிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதி குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வானது வருகின்ற ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஒன்றிய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, CUET UG தேர்வு வருகின்ற ஜூலை 15, ஜூலை 16, ஜூலை 19, ஜூலை 20, ஆகஸ்ட் 4, ஆகஸ்ட் 5, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. குறிப்பாக CUET UG தேர்வானது 554 நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவிற்கு வெளியே 13 நகரங்களில் நடத்தப்படவுள்ளது.
கணினி அடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும். CUET UG-க்கு ஆன்லைன் விண்ணப்பப் படிவம் முன்னதாக ஏப்ரல் 2 அன்று வெளியிடப்பட்டது மற்றும் காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், ஒன்றிய பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான ஒரே தேர்வு இது என்பதால், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையின் பேரில் விண்ணப்பிப்பதற்கான பதிவு மீண்டும் ஒருமுறை கடைசியாக திறக்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் http://cuet.samarth.ac.in என்ற இணைய தளம் மூலமாக இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நுழைவுத்தேர்வை முன்னிட்டு விண்ணப்பதாரர்களுக்கு இ-அட்மிட் கார்டு NTA இணையதளம் https://cuet.samarth.ac.in/ மூலம் தற்காலிகமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு cuetug@nta.ac.in என்ற ஹெல்ப்லைன் மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் 011-40759000 / 011-6922 7700 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள 45 ஒன்றிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமல்லாமல் CUET மதிப்பெண்கள் கட்டாயம் என்று UGC தலைவர் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.