×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ தாம் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி பேச்சு!!

சென்னை: மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், உடல் பரிசோதனைக்காக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நீரிழிவால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின்,  எடப்பாடி பழனிசாமி, கமல் ஹாசன், சீமான் , அன்புமணி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் விஜயகாந்த் விரைவில் பூரண  குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். விஜயகாந்த்திற்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். மேலும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ தாம் பிரார்த்தனை செய்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


Tags : PM ,Modi ,President President Vijayakanth , Temujin, Vijaykanth, Prayer, Prime Minister Modi
× RELATED வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு...