சேலம்: சென்னை கீழ்ப்பாக்கம், சேலம், திருச்சி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 250 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி 27வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, மாணவர் சூர்யா என்பவருக்கு 4 தங்கப்பதக்கம் உள்பட 6 பேருக்கு தங்கப்பதக்கங்களையும், 107 மருத்துவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி பேசியதாவது: நீட் தேர்வு இல்லாமல் மருத்துவர் ஆகியிருக்கும், கடைசி பேட்ஜ் மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் 3 தங்க பதக்கங்களுக்கு மேல் பெற்ற மாணவர்களை தமிழக முதல்வரிடம் அழைத்து சென்று, அவரிடம் வாழ்த்து பெற வைக்க உள்ளோம். இந்தியாவிலேயே 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில் தான். தனியார் கல்லூரியும் சேர்த்து அதிக அளவில் மருத்துவ கல்லூரி உள்ள மாநிலம் தமிழகம் தான். சேலம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் ஆகிய 4 மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை 250 ஆக அதிகப்படுத்த கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளது. இதற்கு அதிக செலவாகும் என்றாலும், நிறைவேற்றிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.