சென்னை: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பிஇ, பிடெக், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையில், தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு செய்தார்.
அதற்கு பிறகு அவர் அளித்த பேட்டி: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜூலை 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் காலி பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளது. பாலிடெக்னிக் படிப்பு முடித்தவர்கள் இந்த ஆண்டு முதல் நேரடியாக அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நடைமுறை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.