×

பிரபல நடிகை பலாத்கார வழக்கு நடிகர் சித்தீக்கிடம் போலீசார் திடீர் விசாரணை

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தற்போது தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதற்கு நடிகர் திலீப் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்தவர்கள், விசாரணையின்போது பல்டியடித்தவர்கள் உள்பட பலரிடம் மீண்டும் விசாரணை நடக்கிறது.இதற்கிடையே மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தீக். திலீப்பின் மிக நெருங்கிய நண்பர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது திலீப்புக்கு ஆதரவாகவே வாக்குமூலம் கொடுத்தார். தவிர பாதிக்கப்பட்ட நடிகையை பலமுறை கிண்டல் செய்து பேட்டி கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் நடிகர் சித்தீக் சமீபத்தில் ஒரு தனியார் டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகை பலாத்கார வழக்கில் திலீப் ஒரு சிறிய தவறு செய்து விட்டார்.

ஆனாலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதால் எந்த காரணம் கொண்டும் அவரை கை விடமாட்டேன் என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.பலாத்கார வழக்கில் திலீப்புக்கு எதிராக முதலில் வாக்குமூலம் கொடுத்த பலர் பின்னர் பல்டியடித்தனர். இது போலீசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு எதிராக ஏதாவது முக்கிய ஆதாரங்கள் கிடைக்காதா என்று தவித்துக் கொண்டிருந்த போலீசுக்கு சித்தீக்கின் பேட்டி நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார், அவரிடம் விசாரணை நடத்த தீர்மானித்தனர். அதன்படி நேற்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடிகை பலாத்கார வழக்கு குறித்து பல முக்கிய விவரங்களை போலீசார் அவரிடம் கேட்டறிந்தனர்.



Tags : Siddiqui , Actor Siddique
× RELATED பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான...