×

சுங்குவார்சத்திரம் அருகே வீட்டை உடைத்து 10 சவரன் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அருகே வீட்டை உடைத்து 10 சவரன் நகை, ₹ 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் ஊராட்சி சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (70). இவரது, மனைவி புஷ்பா (65). இவர்கள் இருவரும் செவித்திறன் பாதிப்பு உள்ளவர்கள். நேற்று முந்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென விழித்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த அறையில் துணிகள் மற்றும் பாத்திரங்கள் கலைந்து உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், பின்பக்கம் சென்று பார்த்ததில், பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், வீட்டின் பீரோவில் வைக்கபட்டிருந்த 4 மோதிரங்கள், 1 செயின், 2  வளையல்கள் மற்றும் ₹ 50 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கபட்டிருப்பது தெரியவந்தது. உடனே, சென்னையில் உள்ள தனது மகனுக்கு தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரோகைகளை பதிவு செய்து சென்றுள்ளனர். இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, இதே பகுதியில் உள்ள இரு வீட்டில் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயுள்ளது. அது தொடர்பாகவும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




Tags : Sungwarsathram , Jewelry, money robbery: handcuffs of mysterious persons
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம்...