ஆவடி: வரும் 24ம் தேதி பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலையம் திறக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆவடி காவல் ஆணையரத்திற்கு உட்பட்டு இயங்கி வருவது பட்டாபிராம் காவல் நிலையம். இது, கடந்த 1988 ஆண்டு தொடங்கப்பட்டது. திருநின்றவூர் காவல் நிலையம் நெமிலிச்சேரி முதல் சேக்காடு அண்ணா நகர் வரை மற்றும் பட்டாபிராம் முதல் சோரஞ்சேரி வரை எல்லையாக கொண்டு இயங்கி வருகிறது. அதுபோல், பட்டாபிராம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் போக்குவரத்து சார்ந்த புகார்களை, ஆவடி போக்குவரத்து காவல் நிலையம் விசாரித்து வந்தது. அடுத்த ஆண்டு டைடல் பார்க் திறக்கும் பட்சத்தில், அங்கு 5000 திற்கும் மேற்பட்டோர் நாள்தோறும் வந்து செல்லலாம் என்ற சூழ்நிலை அமைந்துள்ளது.
அப்போது ஏற்படும் போக்குவரத்து பிரசனை எதிரொலியாக, பட்டாபிராம் காவல் நிலையத்தின் பழைய கட்டிடத்தை புனரமைத்து, பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலையமாக மாற்ற அரசு முடிவெடுத்து அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.ஆவடி போக்குவரத்து காவல் எல்லையில் இருந்து, பட்டாபிராம் போக்குவரத்து காவல் எல்லையாக பிரியும் நிலையில், அதன் எல்லையும் விரிவடையும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு எல்லை விரிவடையும் நிலையில், பட்டாபிராம் முதல் சோரஞ்சேரி மற்றும் திருமணம் கிராமம் வரை, பட்டாபிராம் முதல் திருநின்றவூர் டாட்டா ஸ்டீல் நிறுவனம் மற்றும் பட்டாபிராம் - சேக்காடு அண்ணாநகர் வரை எல்லைகள் அமையவுள்ளதாக தெரிகிறது. இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வருகிற 24ம் தேதி முதல் இயங்க போகும் பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலையத்தை, ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.