×

நாகர்கோவில் சுங்கான்கடையில் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் கிடக்கும் தடுப்பு சுவர் பணி: 4 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம்

நாகர்கோவில்: நாகர்கோவில் சுங்கான்கடை ஐக்கியான்குளம் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி 4 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பது வாகன ஓட்டிகளை வேதனை அடைய செய்துள்ளது. மரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளும் மோசமாக கிடப்பதால் அதிக விபத்துக்கள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ளது ஐக்கியான்குளம். இந்த குளத்தின் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாததால், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி உயிர் பலிகளும் ஏற்பட்டன.

எனவே வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க, குளத்தையொட்டி தடுப்பு சுவர்கள் அமைத்து சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை (நாகர்கோவில் மண்டலம், திருநெல்வேலி வட்டம்) சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதன்படி டெண்டர் விடப்பட்டு, ரூ.4 கோடியே 83 லட்சத்து 25 ஆயிரத்து 384 மதிப்பில் சாலையின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள், கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. பணிகள் தொடங்கி சுமார் 4 வருடங்கள் ஆகியும் இன்னும் முடிவடையாமல் கிடப்பில் உள்ளது.

இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஐக்கியான்குளம் பகுதியில் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் ஆபத்தான நிலையில் இந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன. நான்கு வழிச்சாலை பணிகள் கிடப்பில் உள்ளதால், தற்போது நடைமுறையில் உள்ள என்.எச். 47, என்.எச். 47 பி ஆகிய சாலைகளை தான் ஆக ஓட்டிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலைகளில் பல இடங்கள் மிகவும் மோசமாக உள்ளன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை என்பது நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலை ஆகும்.
 
இந்த சாலையில் தொடங்கிய தடுப்பு சுவர் பணிகளை முழுமையாக முடிக்காமல் 4 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு இருப்பது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், மரங்களை அகற்ற வேண்டும். மண் பிரச்சினை என பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்களின் உயிருக்கு தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விபத்துக்களும், உயிர் பலிகளம் அதிகமாக நடக்கும் குமரி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியமும் மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக இந்த பணிகளை தொடங்கி ஐக்கியான்குளம் கரையில் கிடப்பில் உள்ள தடுப்பு சுவர் பணிகளை வேகப்படுத்தி முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் மோசமாக கிடக்கும் சாலைகளால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிக விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் தான் அதிக விபத்துக்கள் நடந்துள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் கிடக்கும் பணிகளை வேகமாக முடித்து, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.
சாலை பணிக்காக தேசிய நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிதியை வைத்து பணிகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் ஜல்லி, மணல் பிரச்னையும் உள்ளது. இதனால் பணிகள் கிடப்பில் கிடக்கின்றன என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags : National Highway ,Nagercoil Customs , Barrier wall work on National Highway at Nagercoil Customs Store: 4 years of disgrace
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!