காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே பக்திகா மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 255 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதுவரை இடிபாடுகளில் சிக்கி 1,250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீட்புக் குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்டு வருகின்றன. நிலநடுக்கம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 1000த்தை கடந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் நிலவி வருகிறது.
இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 500 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் உணரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, நேற்றிரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, சுமார் 51 கி.மீ ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவில் ஆப்கானில் நிலநடுக்கம் ஏற்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.