×

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொண்டைமானின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும். மன்னரின் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவுகூர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் வரலாறு:

1686ம் ஆண்டு முதல் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்த தொண்டை மான் பரம்பரையின் 9வது மற்றும் கடைசி மன்னராக பிரகதம்பதாஸ் ராஜராஜகோபால தொண்டைமான் ஆட்சி செய்தார். 1922ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்த ராஜா ராஜகோபால தொண்டைமான், 1926ம் ஆண்டு தனது 6 வயதில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளம் மன்னராக பொறுப்பேற்றார். சிறிய வயதில் ஆட்சி பொறுப்பேற்றதால், சமஸ்தானத்தின் நிர்வாகத்தை ஆங்கிலேயே ஆட்சியர் ஒருவர் தலைமையில் நிர்வாக குழு கவனித்து வந்தது.

பின்னர் 1944ம் ஆண்டு ராஜகோபால தொண்டைமானின் 22வது வயதில் சமஸ்தானத்தின் முழு பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு புதுக்கோட்டை சமஸ்தானம் கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம், கூட்டுறவு ஆகிய துறைகளில் மக்கள் நல திட்டங்கள் பலவும் செயல்படுத்தப்பட்டன. நாடு சுதந்திரத்திற்கு இந்தியாவுடன் புதுக்கோட்டையை இணைத்தபின் ராஜகோபால தொண்டைமான், இந்திய அரசுக்கு கொடுத்த அவரது அரண்மனையில் தான் தற்போதைய ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.

ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மன்னர் கல்லூரி, நீதிமன்றம், பழைய நகராட்சி அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை உள்ளிட்ட புதுக்கோட்டை நகரின் முக்கிய கட்டிடங்கள் ராஜா ராஜகோபால தொண்டைமான் கொடுத்து சென்ற இடத்தில் தான் இயங்குகின்றன.

இப்படி புதுக்கோட்டை நகரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அவர் தொடர்ந்து நினைவுகூரப்பட வேண்டும் என்பதே புதுக்கோட்டை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை நிறைவேற்றும் வகையிலேயே தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.


Tags : Pudukkottai ,King ,Rajagopala Thondaiman Manimandapam ,Chief Minister ,MK Stalin , Pudukkottai King Rajagopala Thondaiman, Manimandapam, MK Stalin
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...