நெல்லை: நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பிரவீன்குமார் (23). கடந்த 2018ம் ஆண்டு பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 2018 செப்.10ம் தேதி அவரை, அவருக்கு சொந்தமான வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி அன்புச்செல்வி விசாரித்து, பிரவீன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.