×

பிரபல நடிகை பலாத்கார வழக்கு நடிகர் சித்தீக்கிடம் போலீசார் திடீர் விசாரணை

திருவனந்தபுரம்: நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் நடிகர் திலீப் ஒரு சிறிய தவறு செய்துவிட்டார் என்று கருத்து தெரிவித்த பிரபல நடிகர் சித்தீக்கிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தற்போது தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதற்கு நடிகர் திலீப் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்தவர்கள், விசாரணையின்போது பல்டியடித்தவர்கள் உள்பட பலரிடம் மீண்டும் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தீக். திலீப்பின் மிக நெருங்கிய நண்பர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது திலீப்புக்கு ஆதரவாகவே வாக்குமூலம் கொடுத்தார். தவிர பாதிக்கப்பட்ட நடிகையை பலமுறை கிண்டல் செய்து பேட்டி கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மாதம் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கரை தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நடிகை, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், பலாத்கார வழக்கு விசாரணையில் முட்டுக்கட்டை ஏற்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றியை தடுப்பதற்காகவே நடிகை இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று கூறினர். அப்போது, தேர்தலில் ஓட்டு போட்ட பிறகு நடிகர் சித்தீக்கிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட நடிகை என்ன இந்த தேர்தலில் போட்டியிடவா செய்கிறார்’ என்று கிண்டலாக கேட்டார்.

இந்நிலையில் நடிகர் சித்தீக் சமீபத்தில் ஒரு தனியார் டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகை பலாத்கார வழக்கில் திலீப் ஒரு சிறிய தவறு செய்து விட்டார். ஆனாலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதால் எந்த காரணம் கொண்டும் அவரை கை விடமாட்டேன் என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பலாத்கார வழக்கில் திலீப்புக்கு எதிராக முதலில் வாக்குமூலம் கொடுத்த பலர் பின்னர் பல்டியடித்தனர். இது போலீசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனால் அவருக்கு எதிராக ஏதாவது முக்கிய ஆதாரங்கள் கிடைக்காதா? என்று தவித்து கொண்டிருந்த போலீசுக்கு சித்தீக்கின் பேட்டி நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார், அவரிடம் விசாரணை நடத்த தீர்மானித்தனர். அதன்படி நேற்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடிகை பலாத்கார வழக்கு குறித்து பல முக்கிய விவரங்கள் குறித்து போலீசார் அவரிடம் கேட்டறிந்தனர்.

Tags : Siddiqui , Famous actress rape case, actor Siddique, police raid
× RELATED மெட்ரோ ரயிலில் செல்ல ஒற்றை க்யூஆர்...