×

அதிமுக பொதுக்குழு நாளை நடக்குமா?.. நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். vs இ.பி.எஸ்.. காரசார விவாதம்

சென்னை: பொதுக்குழுவுக்கே அதிகபட்ச அதிகாரம்  என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி கூடுதல் மனுவை இருவரும் தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘‘கட்சி விதிகளின்படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுக கட்சி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த முடியாது. எனவே, கட்சி விதிகளில்  திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும்.

கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிச்சாமி சார்பில் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். அப்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் இப்போது பொதுக்குழுவை நடத்த வேண்டிய அவசியமில்லை. எனவே, பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளோம்’ என்றார். இதைக்கேட்ட நீதிபதி, இந்த வழக்குகள் அனைத்தும் மதியம் 3 மணிக்கு விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 3 மணி அளவில் வழக்கு விசாரணை தொடங்கியது அப்போது;

மனுதாரர் தரப்பு வாதம்:

அப்போது ஆஜரான மனுதாரர்; ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவரக்கூடாது. பொதுக்குழுவை வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபனை இல்லை; தலைமையை மாற்றும் திருத்தங்களை செய்யக்கூடாது. பொதுக்குழு நடத்தலாம்; ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவரக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.  

ஓபிஎஸ் தரப்பு வாதம்:

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் வாதிட்டார். அப்போது, கடந்த டிசம்பரில் உட்கட்சித் தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது; 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. 23 வரைவு தீமானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் வந்தது. கட்சி அலுவலகத்தில் இருந்து வந்த 23 வரைவு தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 வரைவு தீர்மானங்களின் நகல் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை. கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்ற மனுதாரரின் அச்சம் குறித்த தீர்மானம் அதில் இல்லை. இந்த 23ஐ தவிர இனியும் புதிதாக தீர்மானங்களை சேர்க்கக்கூடாது. அதிமுக விதிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன்எனவும் ஓ.பி.எஸ். சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

எடப்பாடி தரப்பு வாதம்

2017ல் பொதுக்குழு தீர்மானம் மூலம்தான் அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டன என்று ஈ.பி.எஸ். தரப்பு வாதிட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அழைப்பு விடுத்துள்ளனர். பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், நடக்காது என உத்தரவாதமாக சொல்ல முடியாது, பொதுக்குழு எந்த முடிவையும் எடுக்கலாம். எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும், அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

கொள்கை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்துக்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம். நாளைய பொதுக்குழுவில் திருத்தம் நடக்கலாம், நடக்காமல் இருக்கலாம். பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம் ஆகும். அஜெண்டா இல்லாமல்தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளன என வாதிடப்பட்டது. பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு; ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தியுள்ளனர். பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும், பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும்.

எந்த விதியையும், நீக்கவோ, சேர்க்கவோ 2665 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் இது நாடாகும் இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது. நாளை கட்சி சட்ட விதிகள் திருத்தம் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும், பெரும்பான்மையை முடிவு செய்யும். விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதுமானது. நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கூடாது என வாதிட்டனர்.

ஓபிஎஸ் தரப்பு வாதம்:
எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும். பொதுக்குழுவில் முடிவுகளை காக்கின்ற அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர் சண்முகம் வாதம்;
பொதுக்குழுவில் செயல் திட்டத்தை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். பொதுக்குழுவில் சிலர் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் எடுக்க கூடாது என மனுதாரர் சண்முகம் வாதிட்டார்.



Tags : Indirect General Group ,GP E. ,E. ,GP S , Will the AIADMK general body meet tomorrow? vs EPS
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...