×

தஞ்சை மாவட்டத்தில் வைத்திலிங்கம் கூடாரம் காலி: பெரும்பாலான ஆதரவாளர்கள் எடப்பாடி அணிக்கு தாவினர்

தஞ்சை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நால்வர் அணியில் ஒருவராக செயல்பட்டவர் ஒரத்தநாட்டை சேர்ந்த வைத்திலிங்கம். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் தோற்றபோது வைத்திலிங்கத்தை அழைத்த ஜெயலலிதா, அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி தந்து ஆறுதல் கூறினார். அந்தளவிற்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் அதிமுக நிர்வாகத்தை பார்த்து வந்தார்.

இந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். தொடர்ந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் உள்ளது. ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி அணியும், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியும் பகிரங்கமாக களத்தில் இறங்கியுள்ளன. இதில் ஆரம்பம் முதலே ஓபிஎஸ் அணிக்கு வைத்திலிங்கம் ஆதரவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் எடப்பாடிக்கு ஆதரவு கரங்கள் வலுத்து வருகிறது. ஏற்கனவே நாகை, திருவாரூர் மாவட்டங்களில் எடப்பாடிக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் தஞ்சை மாவட்டம் ஓபிஎஸ்க்கு தான் ஆதரவு என வைத்திலிங்கம் சொல்லி வந்த நிலையில், தற்போது அவரது வலதுகரமே எடப்பாடி பக்கம் சாய்ந்துள்ளது, அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் பால்வள தலைவரான காந்தி கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதிக்கு வைத்திலிங்கம் மூலம் சீட்டு வாங்கி நின்றார். ஆனால் உள்குத்தால் தோற்ற அவர், தொடர்ந்து வைத்திலிங்கத்தின் உண்மை விசுவாசி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காந்தி, முன்னாள் அமைச்சரான திருவாரூர் காமராஜ் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது வைத்திலிங்கத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி நேற்று முன்னாள் எம்.பி. பாரதிமோகன், திருவையாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி, பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ.சேகர், பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ்,  தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் சாமுவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் வீரணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, பேராவூரணி ஒன்றிய செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர் நீலகண்டன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் செந்தில், கிழக்கு ஒன்றிய செயலாளர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பட்டுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் உதயகுமார், பாரதி, வடக்கு மாவட்டம் கும்பகோணம் ராம.ராமநாதன், திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர் செந்தில், அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் சூரியநாராயணன், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராணி உட்பட பேரூர், நகர, ஒன்றிய செயலாளர்கள் இன்று எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருமே வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள். மொத்தத்தில் வைத்திலிங்கத்தின் கூடாரம் டெல்டாவில் காலியாகிவிட்டது என்று அதிருப்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Vaithilingam ,Tanjore ,Edappadi , Tanjore District, Vaithilingam Tent, Edappadi Team,
× RELATED கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்காத...