சிவகாசி : சிவகாசி அருகே, செட்டிக் ஊருணி பகுதியில் செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்புச்சுவர் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி அருகே செவலூர் ஊராட்சியில் வெள்ளூர்-எரிச்சநத்தம் ரோட்டோரம் செட்டி ஊருணி அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக
கொத்தனேரி, குமிழங்குளம், வெள்ளூர், கவுண்டன்பட்டி, ஆமத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மழை காலங்களில் செட்டி ஊருணியில் நீர் நிரம்பி காணப்படும். இந்நிலையில், ஊருணி கரையோரம் செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. மேலும், சாலையும் வளைவாக அமைந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் வளைந்து செல்லும்போது ஊருணியில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, செட்டி ஊருணி கரையோரம் தடுப்புவேலி அல்லது சுவர் மற்றும் விளக்குகள் அமைக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.