உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் திருச்சி, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நூற்றுக்கணக்கான பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இது மட்டுமின்றி உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்த வரும் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் இருந்து கிராமப்புறத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தின் குடிநீர் வினியோகம் செய்யும் மையம் அருகில் உள்ள மின் கம்பம் பல ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டதால் தற்போது இந்த மின்கம்பம் முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்ட் காரைகள் உடைந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலை உள்ளது. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை உள்ளதால் இந்த பகுதியில் பயணிகள் நின்று பேருந்துகளில் செல்வதற்கு அச்சம் அடைந்து வருகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தாக விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.