கொழும்பு: இலங்கையில் நீண்ட இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 21வது சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற பிறகு, நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தை நீக்கி விட்டு, அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தை அமல்படுத்தினார். அதே போல், இரட்டை குடியுரிமை, அரசு பதவிகளில் பணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கும் 21-ஏ சட்ட திருத்தமும் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிபர் கோத்தபயவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ளன. இதனால், அதிபரின் அதிகாரத்தை குறைக்க 21வது சட்ட திருத்தத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கும் ராஜபக்சே சகோதரர்கள் முட்டுக்கட்டையாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், அதிபரின் அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 21வது சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கூறும் போது, ``21வது சட்ட திருத்தம் இன்று (நேற்று)அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்க, விஜேராஜபக்ச ஆகியோர் இதனை தாக்கல் செய்ய அழுத்தம் கொடுத்ததற்கு நன்றி,’’ என்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, 21-ஏ சட்ட திருத்தமும் விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.