கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் 8வது சர்வதேச யோகா தின விழா நேற்று நடந்தது. இதில் 84 மாணவர்கள் உஸ்த்ராசனத்தில் 5 நிமிடங்கள் நின்று உலக சாதனை படைத்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் 8வது சர்வதேச யோகா தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்றுனரான சந்தியா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார், அசிஸ்ட் உலக சாதனை ஆராய்ச்சி மைய நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
நிகழ்வின்போது, யோகா மைய மாணவர்கள் 84 பேர் ஒட்டக வடிவில் யோகாசனமான உஸ்த்ராசனத்தில் தொடர்ந்து 5 நிமிடங்கள் நின்று உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை ‘அசிஸ்ட் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்தது. யோகா ஆசிரியை எஸ்.சந்தியா மற்றும் சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கு, அசிஸ்ட் உலக சாதனைக்கான சான்றுகளை வழங்கப்பட்டது. முன்னதாக, யோகாவின் வரலாறு, யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு அழைப்பாளர்கள் பேசினர்.