சென்னை: எம்பி பதவி கிடைக்காததால் நான் ஓபிஎஸ்சுக்கு எதிராக பேசுவதாக கூறுவது தவறு. அவருக்காக நான் நிதியமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி 23ம் தேதி நடைபெறும். இதில் சுமுகமான முடிவு எட்டப்படும். எனக்கு பதவி ஆசை கிடையாது. கட்சி நலன்தான் முக்கியம். கட்சியில் நான் அனைத்து பதவிகளையும் பார்த்துவிட்டேன். பதவி ஆசை பிடித்தவன் ஜெயக்குமார், எனக்கு மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்காததால்தான் ஓபிஎஸ்சுக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள். 2017ம் ஆண்டு ஓபிஎஸ்சுக்காக நிதி அமைச்சர் பதவியை விட்டுத் தந்தேன். எனக்கு கட்சிதான் முக்கியம். என்ன பிரச்னை என்றாலும் பொதுக்குழுவில் சுமுகமாக முடிவு எடுக்கப்படும். இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் ஒரே இடத்தில் அமர்ந்து டீ சாப்பிட்டால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.