×

மெட்ரோ ரயிலின் 4-ம் வழித்தடத்தில் உள்ள 7 கோயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் 4ம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் மூலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் உள்பட 7 கோயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று  சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 4ம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோயில், வடபழனி வெங்கீஸ்வரர் கோயில், வடபழனி அழகர் பெருமாள் கோயில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் கோயில் குளம் ஆகிய புராதன கோயில் கட்டிடங்கள் அமைந்துள்ளன.
 
இந்த கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்காமல், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி  சென்னையை சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட 3 தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்ட போதும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை.

நூறு ஆண்டுகளுக்கு மேலான கோயில்களின் பட்டியலை தயாரித்து, புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்காததால், மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்தில் உள்ள கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் தேர் திருவிழா உள்ளிட்ட கோவில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலுக்காக அரசு மற்றும் தனியார் சொத்துக்களை கையகப்படுத்துவதை விடுத்து கோயில் நிலங்கள் கையகப்படுத்தப்படுத்தப்படுகின்றன.

எனவே, மெட்ரோ ரயில் 4ம் வழித்தடத்தால் பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்பட 7 கோயில்களையும் புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும். இந்த கோயில்கள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் 4ம் வழித்தட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்த்து.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அடவகேட் ஜெனரல் ஆர். சண்முக சுந்தரம், மெட்ரோ ரயில் பணியால் கோயில் கட்டுமானங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவை பாதுகாக்கப்படும். வணிக பயன்பாட்டுக்கான பயன்படுத்தப்பட்ட கோயில் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளன என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : route 4 ,Metro ,Tamil Nadu Government , 7 temples on Route 4 of Metro Rail will not be affected: Government of Tamil Nadu informed in the High Court
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில்...