நாகை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அக்னிபாதை திட்டத்துக்கு மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பான்மையினர் இந்துக்களே. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக 4 ஆண்டுகள் பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அதிமுகவை, பாஜக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார். காவிரியின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய நான்கு அணைகளை கர்நாடக அரசு கட்டியுள்ளது. இதனால், காவிரியில் இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளக் காலங்களில், உபரிநீர் திறக்கப்பட்டு, தமிழகத்திற்கு அதிக நீர் வழங்கியதாக கணக்கு காட்டப்படுகிறது. இந்நிலையில், மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.