சிதம்பரம்: அதிமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகரம், கிள்ளை பேருர் கழகத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கு தீர்மான பதிவேடு வழங்குதல் மற்றும் கட்சி வளர்ச்சி ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான பாண்டியன் பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மற்றும் மாவட்ட, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பாண்டியன் எம்எல்ஏ பேசுகையில், இன்றைக்கு சில பிரச்னைகள் இருக்கிறது. வருகிற 23ம் தேதி பொதுக்குழு நடக்க இருக்கிறது. அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் செல்லும்போது அந்த வாகனங்களிலேயே பொதுக்குழு உறுப்பினர்கள் செல்ல வேண்டும். திரும்பி வரும்போது வேண்டுமானால் நீங்கள் உங்கள் வாகனங்களில் வந்து கொள்ளலாம்.
அதிமுக பொதுக்குழுவில் மற்றவர்கள் நினைப்பது எல்லாம் நடக்காது. அதிமுக பொதுக்குழு வருகிற 23ம் தேதி அவசியம் கண்டிப்பாக நடக்கும். அதில் நமது ஒற்றைத் தலைமை அவசியம் இருக்கும். அது எடப்பாடியாராகத்தான் இருப்பார். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, என்றார்.