×

பொங்கல் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*பொங்கல் செய்யும்போது நீரில் சிறிது நெய் அல்லது டால்டா விடுவதோடு மட்டுமின்றி அரிசியைக் களைந்து, சிறிது ஊறிய பின்பு போட்டால் பொங்கல் கடைசி வரை துளிகூட பாத்திரத்தில் ஒட்டாது.

*வெண் பொங்கலுக்கு மிளகு, சீரகத்துடன், இரண்டு பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து நெய்யில் தாளித்து சேர்த்தால் பொங்கல் நல்ல வாசனையுடன் கமகமவென்று இருக்கும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*வெல்லப் பொங்கல், கல்கண்டு பொங்கல் என்று எது செய்வதாக இருந்தாலும் அரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். வெல்லப் பொங்கலாக இருந்தால் வெல்லத்தை இரட்டைக் கம்பி பதம் பாகு வைக்கவும். வறுத்த அரிசியை வேக வைத்து அதில் பாகு சேர்க்கவும். கல்கண்டு பொங்கல் என்றால் கல்கண்டை பொடித்து ஒரு கம்பி பதம் பாகு வைத்து வெந்த சாதத்தில் சேர்க்கவும். இது நல்ல சுவையுடன் நீண்டநேரம் கெடாமல் இருக்கும். சிறிது பச்சைக்கற்பூரம் சேர்க்க வாசனை அசத்தும்.

*கரும்புச்சாற்றில் பொங்கல் வைக்கும்போது, கரும்புச்சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க விட்டு, வடிகட்டிய பிறகு பொங்கலில் கலந்தால் கரும்புச் சக்கை, தூசு முதலியன நீக்கி விடுவதோடு, ருசியும் கூடும்.

*கீரை பொங்கல் செய்யும்போது, அரிசி, பருப்புடன் பொடியாக அரிந்த கீரையையும் உப்பு சேர்த்து வேக விடவும். வேர்க்கடலை, மிளகு, சீரகம், வரமிளகாய், இஞ்சித்துருவல், மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து தேங்காய் எண்ணெயில் தாளித்து உடன் சேர்க்கவும்.

*காய்கறிப் பொங்கல் செய்யும்போது, அரிசி, பருப்புடன், காய்கறிகளை உப்பு சேர்த்து வேக விடவும். முந்திரி, மிளகு, சீரகம், வரமிளகாய், இஞ்சித்துருவல், மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய், நெய் இரண்டையும் சேர்த்துத் தாளித்து, வெந்த பொங்கலில் சேர்க்க, சுவையோ அசத்தும்.

* பொங்கலுக்கு குழம்பு வைக்கும்போது நாட்டுக்காய்களை ஒரே அளவாக பெரிதாக வெட்டி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து (குக்கரை தவிர்த்து) பாத்திரத்தில் வேக வைத்தால்தான் குழையாமலும் பார்ப்பதற்கு நன்றாகவும் இருக்கும்.

- இந்திராணி தங்கவேல், சென்னை.

* சர்க்கரைப் பொங்கல் செய்ய வெல்லப்பாகு தயாரிக்கும்போது அதில் நெய் கலந்துவிட்டால், சுவையும், மணமும் கூடும். நெய்யும் குறைவாகச் செலவாகும்.

* வெண்பொங்கல், வடை செய்யும்போது மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்த்தால்,  மிளகை தூர எறியாமல் சாப்பிடலாம்.

- ஆர். பத்மப்ரியா, திருச்சி.

* பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்து கலந்துவிட்டால் கெட்டியாகி விடும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, பூந்தமல்லி.

* பொங்கல் சமயத்தில் கனுப்பிடி அன்று கலர் கலராக சாதங்களை வைப்பதுண்டு. சிவப்பு சாதம் செய்ய சிலர் சுண்ணாம்பு, சர்ஃப் என்று சேர்க்க வேண்டாம். பறவைகள் இதை சாப்பிட்டால் நல்லதல்ல. ஆகவே சாதத்தில் சிறிது கேசரி பவுடர் சேர்த்தால் சிவப்பாக மாறும்.

* சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்க நாம் பொங்கலுக்கான வெல்லப்பாகை நன்றாக கெட்டியாக காய்ச்சி பிறகு அதை குழைத்த சாதம் மற்றும் பயத்தம் பருப்புக் கலவையுடன் சேர்த்துக் கிளற வேண்டும். இப்படித் தயாரித்தால் சர்க்கரைப் பொங்கல் மிகச் சுவையாக இருக்கும்.

- இந்திரா, திருச்சி.

* சர்க்கரைப் பொங்கலில் நன்கு கனிந்த பலாச்சுளைகளைப் பாலில் அரைத்துக் கலந்தால் சுவை கூடும்.

* சர்க்கரைப் பொங்கலை இறக்கி வைக்குமுன் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.

* கேரட் துருவலை வேக வைத்து, பொங்கல் கெட்டியாகும்போது சேர்த்தால் சுவை கூடும். நிறமும் அழகாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

* பொங்கலுக்கு வெல்லத்தை குறைத்துக்கொண்டு, டைமண்ட் கற்கண்டு, மில்க்மெய்ட் 3 டீஸ்பூன், சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி இறக்க ரிச்சான சுவையில் அசத்தும் பொங்கல்.

* சர்க்கரைப் பொங்கலில் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிச் செய்யாமல் சிவக்க வறுத்து சேர்த்தால், முந்திரிப்பருப்பு அதிகம் சேர்க்க தேவையிருக்காது.

- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

கோயில் பொங்கல்

பொதுவாக கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களுக்கு தனி சுவையுண்டு. அதில் குறிப்பாக கோயில்களில் கொடுக்கப்படும் வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல். அதே போல் நாம் வீட்டில் செய்தாலும் இந்த சுவையை ஈடுகொடுக்க முடியாது. கோயில்களில் கொடுக்கப்படும் வெண்பொங்கலை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையானவை

பச்சரிசி-2 கப், மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்,
பச்சைப் பருப்பு(அ)பாசிப்பருப்பு-3/4 கப்,
உப்பு-தேவையான அளவு, தாளிக்க: நெய்-1 டேபிள்ஸ்பூன், சீரகம்-2 டீஸ்பூன், முந்திரி-10,
மிளகு-1 டீஸ்பூன், கறிவேப்பிலை-பாதி கொத்து.

செய்முறை

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, நன்கு கழுவி, குக்கரில் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி பருப்புடன் சேர்த்து ஒன்றுக்கு மூன்று என தண்ணீர் ஊற்றி நன்றாகக் குழைய வேக வைக்கவும். வாணலியில் நெய் சேர்த்து மிளகு (ஒன்றிரண்டாகப் பொடித்து), சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டிக் கிளறி பரிமாறவும்.

தொகுப்பு: ரிதி, சென்னை

Tags :
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்