காஞ்சிபுரம்: சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா நிகர் நிலை(சங்கரா பல்கலைக்கழகம்) பல்கலை கழகத்தில் காஞ்சி மகா சுவாமிகளின் 129வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சங்கராச்சாரியார் விஜயேந்திர் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கலாச்சாரமும் நவீன அறிவியல் தொழில் நுட்பத்தையும் இணைக்கும் நோக்கத்துடன் கலை, அறிவியல், வணிகம், மேலாண்மை, பொறியியல், ஆயுர்வேதம் ஆகிய பாடப்பிரிவுகளை மிக உயர்ந்த தரத்தில் இப்பல்கலைக்கழகம் வழங்கிவருவதை பாராட்டினார்.
இந்த உயரிய நோக்கத்தை 2022ல் மேம்படுத்துவதற்காக ஒருமித்த கருத்தை உடையவர்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கூறினார். சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி ராகவன் தலைமை தாங்கினார். பின்னர் சமஸ்கிருத அறிஞர்களான சென்னை சமஸ்கிருத கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் , மணி டிராவிட் சாஸ்திரிகள் ஆகியோருக்கு சமஸ்கிருதத்தில் சிறப்புப் பேராசிரியர் பதவிகள் வழங்கப்பட்டன.
சங்கீத கலாநிதி நெய்வேலி சந்தானகோபாலன் நுண்கலை பிரிவில் சிறப்புப் பேராசிரியர் பதவியும் , மகேஸ்வரன் நம்பூதிரிக்கு சமஸ்கிருதத்தில் கவுரவ பேராசிரியர் பதவியும் வழங்கப்பட்டது. சமஸ்கிருதம் மற்றும் நுண்கலைத் துறையில் சிறந்து விளங்குபவர்களை வரவழைத்து, மாணவர்களுக்கு அதன் பல்வேறு பரிமாணங்களை அறிய செய்யும் நிகர் நிலைப் பல்கலைகழகத்தின் சீரிய முயற்சியை, நிர்வாகக் குழுவின், யுஜிசி நியமன உறுப்பினர் முனைவர் உமையொருபாகன் பாராட்டினார். இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.