செய்யூர்: கடப்பாக்கம் பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பில் கடந்த 1992ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு கலைப்பிரிவு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் 30 ஆண்டுகள் கழித்து முதல் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் அருள்மொழி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கே.பி.சீனிவாசன், ஓய்வுபெற்ற முன்னாள் தலைமையாசிரியர் குமார், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் மயிலங்கிரி மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் தேவகண்ணு, மயிலப்பன், திருஞானசம்பந்தம், ஜெயவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதன்பின் பள்ளியில் உள்ள கழிவறைகளை புதுப்பித்து தருவதாகவும், தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்காக பல உதவிகளை செய்யவதாகவும் கூறினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் மோகன், மகாலிங்கம், முருகதாஸ், அப்துல்ரஹீம், பரந்தாமன் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக முன்னாள் மாணவர் ஐதுரூஸ் நன்றி கூறினார்.