ஸ்ரீபெரும்புதூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 99 வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, துணை தலைவர் மாலதி போஸ்கோ, மாவட்ட கவுன்சிலர் பால்ராஜ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் செந்தில்தேவராஜன், குண்ணம் முருகன், வளர்புரம் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 800 பயனாளிகளுக்கு ரூ 10 லட்சம் மதிப்பில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, வேட்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாவட்ட குழு தலைவர் படப்பை மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவம், கட்சி நிர்வாகிகள் வல்லக்கோட்டை ஜெகன் குமார், சர்தார்பாஷா, தண்டலம் மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.