சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று துணைவேந்தர் தெரிவாய்வுக் குழு அறிவித்துள்ளது. இது குறித்து துணைவேந்தர் தெரிவாய்வுக் குழு தலைவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைழகத் துணைவேந்தர் பதவிக்கான மூன்று நபர்களின் பெயர்களை தமிழக கவர்னர் மற்றும் பல்கலைகழக வேந்தர் ஆகியோருக்குப் பரிந்துரை செய்ய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமையில் தெரிவாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்தெரிவாய்வுக்குழு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதன்படி உரியதகுதியும், அனுபவமும் வாய்ந்த விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், www.tnou.ac.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட பிடிஎஃப் வடிவிலான விண்ணப்பத்தை, ‘ துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகம் ’ என்று உறைமேல் குறிப்பிடப்பட்டு மின்னஞ்சல் மற்றும் பத்வி அஞ்சல் அல்லது நேரடியாக ஜூலை 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். துணைவேந்தராக பணி நியமனம் பெறுபவர், மூன்றாண்டுகள் பதவி வகிப்பார். பதவிக்காலத்திற்குள் 70 வயதை கடந்தால் அப்போதே பணி நிறைவு பெறுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பார்த்தசாரதி கடந்த 2019 ஜூன் 3ம் தேதி பதவி ஏற்று அவரது பதவிக் காலம் கடந்த 2ம் தேதி முடிவடைந்தநிலையில் துணைவேந்தர் தெரிவாய்வுக்குழு தற்போது அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.