சத்தியமங்கலம்: கரும்புக்கு பதிலாக சக்கரவள்ளி கிழங்கு இருந்ததால் ஆத்திரமடைந்த காட்டு யானைகள் சரக்கு வேனை அடித்து நொறுக்கியது. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டுநர் உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக தமிழக -கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை குட்டிகளுடன் காட்டு யானைகள் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்து கரும்புகளை ருசித்து வருகின்றன. இதனால், யானைகளை பார்த்ததும் சில வாகன ஓட்டிகள் கரும்பு கட்டுகளை தூக்கி எறிந்து வருகின்றனர். இதனால் யானைகள் வாகனங்களை பின்தொடர்வதில்லை.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட்ட சரக்கு வேன், நேற்று முன்தினம் மாலை ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது குட்டியுடன் காட்டுயானைகள் வழிமறித்தது. கரும்பு கட்டுகளை தூக்கி ஏறிவார்களா? என்று சிறிது நேரம் காத்திருந்தன. ஆனால், கரும்பு கட்டுகள் எதுவும் வந்து விழவில்லை. இதனையடுத்து கரும்பை தேடி வேனை சுற்றிச்சுற்றி பார்த்தன. வேனில் கரும்புகள் இல்லை, சக்கரவள்ளி கிழக்கு பாரம் ஏற்றப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த யானைகள், வேனை அடித்து நொறுக்கியது. அதுவரை வேனில் இருந்த டிரைவர் கீழே குதித்து ஓடி உயிர் தப்பினார். பின்னர், காட்டு யானைகள் முன்பக்க கண்ணாடியை நொறுக்கியது.
அதன்பின், வேனில் இருந்த சக்கரவள்ளிக்கிழங்கை வேண்டாவெறுப்பாக தின்றன. இதனால், அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெல்ல வனத்துக்குள் சென்று மறைந்தன.
* யானை தாக்கி தொழிலாளி பலி
நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ் (42). தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு கூடலூர் மசினகுடி அடுத்த பொக்காபுரத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.வழியில் புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட் டுயானை அவரை வழிமறித்தது. தப்பி ஓட முயன்றவரை யானை விரட்டி சென்று தாக்கியது. அப்பகுதியினர் ஓடி வந்து சத்தம் எழுப்பி யானையை விரட்டினர். இருப்பினும் பசுவராஜ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.